
குவாந்தான், பிப்ரவரி-19 – உதவித் தேவைப்படும் மக்களை நேரில் சென்று கண்டு உதவும் அரசாங்கத்தின் பரிவுமிக்க Ziarah MADANI திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் அண்மையில், குவாந்தான், கம்போங் பாடாங்கில் 15 குடும்ப உறுப்பினர்களை மனத்திடத்தோடு பராமரித்து வரும் தனித்து வாழும் தாயான பத்துமலையானா கணபதியின் வீட்டுக்கு வருகை மேற்கொள்ளப்பட்டது.
துப்புரவுப் பணியாளராக சிறிய வருமானத்தில், மொத்த குடும்பத்தின் சுமையையும் பத்துமலையான தன் தோளில் ஏற்றி, வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
இதையறிந்து, பிரதமரின் அரசியல் செயலாளர் Farhan Fauzi பத்துமலையானா வீட்டுக்கு நேரில் வருகை மேற்கொண்டு நலம் விசாரித்தார்.
அதன் போது, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் நிதி உதவியும், உணவுக் கூடைகளும் வழங்கப்பட்டன.
சிறிய உதவியாயினும், குடும்பத்தின் சுமையைக் குறைக்க அது துணைப் புரியுமென Farhan நம்பிக்கைத் தெரிவித்தார்.
வீட்டிலிருப்பவர்கள் பசியில் வாடக்கூடாது, பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும், நல்ல வாழ்க்கைச் சூழலில் வாழ வேண்டும் என்பதற்காக உழைக்கும் பத்துமலையானாவுக்கு, இறைவன் அருளால் வலிமைக் கிடைக்கட்டும் என்றார் அவர்.
ஒருவரும் விடுபடக் கூடாது என்பதே பரிவுமிக்க மடானி அரசின் கொள்கை என்பதால், தேவைப்படுவோருக்கு இது போன்ற உதவிகள் தொடருமென Farhan உறுதியளித்தார்.