
ஜோகூர் பாரு, மார்ச் 20 – TBQ அமல் (Amal) காப்பகத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் நேற்று ஜாலான் Abdul Rahman Andakகில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே அவனது வகுப்புத் தோழனின் தந்தையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த சந்தேக நபர் அமீர் என்று அழைக்கப்படும் சிறுவனை பள்ளியின் உள்ளே இருந்து காதைப் பிடித்து வெளியே உள்ள வளாகத்திற்கு இழுத்துச் சென்று, பின்னர் இரண்டு முறை அறைந்ததோடு , அவனது தலையை சுவரில் மோதியதாக அந்த காப்பகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மதியம் மணி 12.50க்கு நடந்ததாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், அமீரின் தலையில் காயங்கள் ஏற்பட்டதோடு அவனுக்கு பொது மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
உள் இரத்தப்போக்கு ஏதேனும் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க மருத்துவ அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அந்த பேச்சாளர் கூறினார்.
ஒரு மாணவர் எவ்வளவு குறும்புக்காரனாக இருந்தாலும், பள்ளியே கட்டொழுங்கு விவகாரத்தை கையாள வேண்டுமே தவிர இதர பெற்றோர் வன்முறையில் ஈடுபடக்கூடாது.
பாதிக்கப்பட்டவர் இரண்டு உடன்பிறப்புகளுடன் பெற்றோர் அல்லாத அனாதையாவார்.
அவர்கள் இருவரும் சமூக நலத் துறையால் அங்கு வைக்கப்பட்ட பிறகு தங்குமிடத்தில் வசிக்கிறார்கள் என்று அந்த காப்பகத்தின் பேச்சாளர் மேலும் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக காப்பக நிர்வாகம் போலீசில் புகார் செய்துள்ளதை தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் ரவூப் செலாமாட் (Raub Selamat) உறுதிப்படுத்தியதோடு, இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.