
ஜெராண்டூட், ஏப்ரல்-6- பஹாங், ஜெராண்டூட் அருகே, குவாலா தாஹான் தேசியப் பூங்காவில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 33 வயது பெண் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது. Pommelien Catharina Maria Meijs எனும் அப்பெண் இதர 16 சுற்றுப்பயணிகள் மற்றும் 2 சுற்றுலா வழிகாட்டிகளுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
1 மணி நேர படகுப் பயணம், 2 மணி நேர நடைப்பயணமாக அக்குழுவினர் Gua Luas மலைக்குச் சென்றுக் கொண்டிருந்தனர். நடைப்பயணத்தின் போது அப்பெண் பலமுறை மயங்கி விழுந்து, ஒரு கட்டத்தில் அவரால் பயணத்தைத் தொடர முடியாமல் போனது.
உடனிருந்தவர்கள் CPR முதலுதவி சிகிச்சை வழங்கியும் அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்புக் குழுவினர் அவரை கீழே கொண்டு வர முயன்ற போது, மழை மற்றும் மேடு பள்ளமாக இருந்ததால் அது முடியாமல் போனது.
பிறகு வெள்ளிக்கிழமை காலை அப்பெண்ணின் சடலம் கீழே கொண்டு வரப்பட்டு சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.