
நீலாய், மே-16 – பல்வேறு மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள், நெகிரி செம்பிலான், நீலாயில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பண்டார் பாரு நீலாயில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் கார் நிறுத்துமிடத்தில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்தது.
முன்னதாக அவ்விரு சந்தேக நபர்களையும் நீலாய் சுற்று வட்டாரத்தில் போலீஸ் துரத்தியது.
பின்னர் சம்பவ இடத்தில் அவர்களைச் சுற்றி வளைத்த போது, கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு போலீஸ் சுட்டதில், 29 மற்றும்
40 வயதிலான இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
கொள்ளையர்கள் சுட்டதில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது; ஆனால் எவரும் காயமடையவில்லை.
நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக் மற்றும் கோலாலம்பூரில் வீடுகள், கடைகள், பொருட்களை அனுப்பும் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகள் போன்ற இடங்களில் அக்கும்பல் கைவரிசை காட்டி வந்துள்ளது.
சுடும் ஆயுதப் பயன்பாட்டைப் பார்க்கும் போது சந்தேக நபர்களுக்கு குண்டர் கும்பல்களுடன் தொடர்பிருக்கும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை என, புக்கிட் அமான் கூறியது.
அக்கும்பலின் எஞ்சிய உறுப்பினர்களுக்கு எதிரான தேடுதல் வேட்டைத் தொடருகிறது.