
கோலாகங்சார், ஏப் 30- கோலக்கங்சார் மாவட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான இலக்கிய நாடகம் மற்றும் கிராமிய நடனப்போட்டியில் 13 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கிராமிய நடனப் பிரிவில்
ரிவர் வேலித் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தில் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் 1,000 ரிங்கிட் பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றனர்.
கட்டித் தோட்ட தமிழ்ப் பள்ளி இரண்டாவது இடத்தைப் பெற்றதுன் மூலம் கிண்ணத்தையும் 700 ரிங்கிட் பரிசுத் தொகையையும் வென்ற வேளையில் மூன்றாவது இடத்திற்கான 500 ரிங்கிட்டை டோவன்பி தோட்ட தமிழ்பள்ளியும் நான்காவது இடத்தைப் பெற்ற எல்பில் தோட்டத் தமிழ்ப் பள்ளி 300 ரிங்கிட்டையும் பெற்றன.
மிகவும் நேர்த்தியுடன் நடத்தப்பட்ட இலக்கிய நாடகப் போட்டியில் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பெற்று 1,500 ரிங்கிட் ரொக்கம் முதல் பரிசையும் வெற்றிக் கிண்ணத்தையும் வென்றனர். தொடர்ந்து, ஈவுட் தமிழ்ப்பள்ளி-2
1,000 ரிங்கிட் பரிசுத் தொகை மற்றும் 2ஆம் இடத்திற்கான வெற்றிக் கிண்ணத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டது.
மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் ஈவுட் தமிழ்ப்பள்ளி-1 மற்றும் சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி என இருப்பள்ளிகளும் வெற்றிப்பெற்று முறையே 700ரிங்கிட் , மற்றும் 500 ரிங்கிட்டைப் பெற்றது.
சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற அப்போட்டியை பேரா மாநில முன்னாள் ம.இ.கா தலைவர் காலஞ்சென்ற டான்ஸ்ரீ இராஜூ அவர்களின் புதல்வர் தொழிலதிபர் இரா. சுந்தரம் மற்றும் அவரது துணைவியாரும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் பேராதரவோடு நடைபெற்ற இப்போட்டி நிகழ்விற்கு ம.இ.கா. தேசிய உதவித் தலைவரும், பேரா மாநில ம.இ.கா.வின் தொடர்புக் குழுத் தலைவருமாகிய தான் ஶ்ரீ இராமசாமி சிறப்பு வருகையளித்து, சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டினைப் பாராட்டி 5,000 மலேசிய ரிங்கிட்டிற்கான காசோலை வழங்கினார்.
இந்நிகழ்வு சிறப்புடன் நடைபெற உதவிக்கரம் நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் தலைவர் .வீ. சின்னாராஜு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.