
டொரோண்டோ, பிப்ரவரி-18 – 80 பேருடன் சென்ற Delta Air Lines ஜெட் விமானம் கனடாவின் டொரோண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, தலைக் குப்புறக் கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் காயமடைந்தனர்.
60 வயது ஆடவர், 40 வயது மாது மற்றும் ஒரு குழந்தை கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்;
ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து 80 பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி அல்லது ஹெலிகாப்டர்கள் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளில் கொண்டுச் சேர்க்கப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் அல்லது விமானம் எப்படி குப்புற விழுந்தது என்பது குறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.
தலைகீழாகக் கிடந்த CRJ-900 விமானத்திலிருந்து மக்கள் தடுமாறி செல்வதையும், பலத்த காற்று மற்றும் வீசும் பனியிலிருந்து முகங்களைப் அவர்கள் பாதுகாத்துக் கொள்வதையும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள படங்களிலும் வீடியோக்களிலும் காண முடிந்தது.
இச்சம்பவத்தை அடுத்து விமான நிலைய செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டன; சுமார் 2 மணி நேர தாமதங்களுக்குப் பிறகு உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கே விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.