
கோலாலம்பூர், டிசம்பர்-12 – வகுப்புக்கு வராமல் போனதற்கான காரணத்தின் ஆதாரமாக, மரணமடைந்த உறவினரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்து அனுப்புமாறு மாணவியிடம் உயர் கல்விக்கூட விரிவுரையாளர் கேட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இடம் பொருள் ஏவல் தெரியாத இந்த எல்லை மீறியச் செயலை, ஒரு விரிவுரையாளரிடமிருந்து தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என, Threads சமூக ஊடகத்தில் அதனைப் பகிர்ந்த பெண் கூறினார்.
பொய்க் காரணங்களைக் கூறி மாணவர்கள் வகுப்புக்கு மட்டம் போடுவதைத் தடுக்க முயல்வது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றே; ஆனால் ஆதாரம் என்ற பெயரில் அதற்காக சடலத்துடன் செல்ஃபி எடுத்து அனுப்பச் சொல்வதெல்லாம் அதிகபட்சம் என அப்பெண் விரக்தியுடன் கூறினார்.
அச்சம்பவம் இணையவாசிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது மாணவரின் தனியுரிமையையும், துக்கத்தில் இருக்கும் குடும்பத்தின் மரியாதையையும் மீறுகிறது என்று அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பலர், மரணச் சான்றிதழ் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணம் போதுமானது என்றும், மாணவரை இவ்வாறு அவமானப்படுத்துவது கல்வி நெறிமுறைக்கு எதிரானது என்றும் வலியுறுத்தினர்.



