
புத்ராஜெயா, ஜூன் 25 – சாலைப் பாதுகாப்பு குறித்த அலட்சிய மனப்பான்மையை எதிர்க்கும் வண்ணம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சம்மன்களைச் செலுத்தாமலிருக்கும் சரக்கு வாகனம் மற்றும் விரைவு பேருந்து இயக்க நிறுவனங்களின் பட்டியலை போக்குவரத்து அமைச்சு (MOT) இன்று வெளியிட்டுள்ளது.
பயணிளின் பாதுகாப்பைப் புறக்கணிக்கும் செயல்பாட்டு நடைமுறைகளை உடனடியாக சரிசெய்ய அனைத்து போக்குவரத்து நிறுவனங்களுக்கும கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்று அமைச்சர் அந்தோனி லோக் கூறியுள்ளார்.
மொத்தம் 11 சரக்கு வாகன இயக்க நிறுவனங்கள் 1,000 க்கும் மேற்பட்ட சம்மன்கள இன்னும் செலுத்தாமல் இருப்பதோடு 17 விரைவு பேருந்து இயக்க நிறுவனங்கள் 200 க்கும் மேற்பட்ட சம்மன்களை செலுத்தாமல் இருக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 14 நாட்களுக்குள் கட்டப்படாமல் இருக்கும் சம்மன்களைத் தீர்க்க வேண்டும் என்று லோக் விளக்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், வாகனங்களை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது உட்பட கடுமையான அமலாக்கத்திற்கு உட்படுத்தப்படும் என்று எச்சரிக்கைப்பட்டுள்ளது.