
கோலாலம்பூர், மார்ச் 7 – இந்து சமயம் குறித்து இஸ்லாமிய சமய போதகர் Zamri Vinothதுடன் விவாதத்தில் ஈடுபட வேண்டாம் என ம.இ.கா-வின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சரும் உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் டாக்டர் ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Zamriயுடன் விவாதம் செய்வது சர்ச்சைக்குரிய அந்த போதகருக்கு தகுதியற்ற அங்கீகாரத்தை மட்டுமே வழங்கும் .
அதோடு Zamri தனது பிரிவினைவாத கருத்துக்களை வெளிப்படுத்த மேடை அமைத்துக் கொடுக்கக்கூடாது என சரவணனை ராமசாமி கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலாக Zamriயின் வெறுப்புணர்வு பேச்சு எதிராக சரவணன் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
விவாதத்தை ரத்து செய்யுங்கள். வெறுப்பைப் பரப்புபவர்களை சட்டம் கையாளட்டும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் ராமசாமி தெரிவித்தார்.
இந்து மதம் குறித்து விவாதம் தேவைப்பட்டால், அது Zamri போன்ற ஒருவருடன் அல்ல, அறிஞர்கள் மற்றும் தகுதி கொண்டவர்களோடு மட்டும்தான் நடத்தப்பட வேண்டும்.
முகலாய படையெடுப்புகள் முதல் காலனித்துவ கால மதமாற்ற முயற்சிகள் வரை பல நூற்றாண்டுகளாக இந்து மதம் தாக்குதல்களைத் தாங்கியுள்ளது.
இத்தகைய நீடித்த பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு மதம் Zamri போன்றவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய அவசியமில்லை.
Zamriயும் மற்றவர்களும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கட்டப்பட்ட அதன் அசைக்க முடியாத அடித்தளத்தில் இந்து மதத்தின் வலிமை உள்ளது என ராமசாமி சுட்டிக்காட்டினார்.