
மணிலா, மே-17 – பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த சயாமிய இரட்டையர்களைப் பிரிக்கும் அறுவை சிகிச்சைக்கான மொத்தச் செலவையும், சவூதி அரேபிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
மணிலாவில் உள்ள சவூதி தூதரகம் நேற்று அதனை உறுதிப்படுத்தியது.
இதையடுத்து Klea மற்றும் Maurice Ann Misa சயாமிய இரட்டைச் சகோதரிகள் இன்று சவூதி தலைநகர் ரியாத் புறப்படுகின்றனர்.
அங்குள்ள மன்னர் அப்துல் அசிஸ் மருத்துவ மையத்தில் இருவரும் பிரத்யேக சிகிச்சைப் பெறுவர்.
சவூதி மன்னர் சல்மானைப் புரவலராகக் கொண்ட மனிதநேயத் திட்டத்தின் கீழ் பிரிக்கப்படவிருக்கும், பிலிப்பின்ஸ் நாட்டின் மூன்றாவது சயாமிய இரட்டையர்கள் இவர்களாவர்.
முன்னதாக அச்சகோதரிகள் தங்களது பெற்றோருடன் சவூதி தூதரை மரியாதை நிமித்தம் சென்று கண்டனர்.
சவூதி அரசுக்கு அவர்களின் தாயும் தந்தையும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நல்லுறவை இந்த அறுவை சிகிச்சை பிரதிபலிப்பதாக தூதரகமும் கூறியது.
சவூதி அரேபிய அரசாங்கத்தின் இந்த ‘சயாமிய இரட்டையர் பிரிப்புத் திட்டம்’ 1990-ல் அறிமுகம் கண்டதிலிருந்து, இதுவரை 27 நாடுகளைச் 146 சயாமிய இரட்டையர்களைப் பிரிக்கும் அறுவை சிகிச்சை உதவியுள்ளது.