
பேங்காக் – மே 27 – 2028 ஆண்டுக்குள் போர்மூலா ஒன் கிரேன்பிரி கார் பந்தயப் போட்டியை நடத்தும் திட்டத்தை தாய்லாந்து கொண்டுள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா
(Paetongtarn Shinawatra) மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸில் கார் பந்தய முதலாளிகளுடன் பேச்சு நடத்திய பின்னர் திங்களன்று தாய்லாந்து அரசாங்கம் இதனைத் தெரிவித்தது.
அடுத்த வாரம் புதன்கிழமை தாய்லாந்து அமைச்சரவையில் அனுமதி பெறுவதற்காக இதற்கான சாத்தியக்கூறு ஆலோசனைத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜிராயு ஹவுங்சப் ( Jirayu Houngsub ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்திற்கான திட்டங்கள், பெரும்பாலும் தலைநகர் பேங்காக்கில் ஒரு தெரு பந்தயமாக நடத்தப்படக்கூடும் என்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக இது தொடர்பாக தீவிரமாக கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இப்போட்டியை நடத்துவதன் மூலம் தாய்லாந்திற்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.