
கோலாலம்பூர், ஏப் 17 – செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் பொருளாதாரத்தை வலுப்படுத்த, சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு (NDRC) ஆணையத்துடன் இரு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
மலேசியா-சீனா இரு நாடுகளின் இலக்கவியல் பொருளாதாரங்களை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் மற்றொன்று, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.
இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட 31 உடன்பாடுகளில் இலக்கவியல் அமைச்சின் இரு உடன்பாடுகளும் அடங்கும். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சீன அதிபர் சீ சின்பிங் முன்னிலையில், மலேசியாவை பிரதிநிதித்து இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோவும், சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு ஆணையத்தின் (NDRC) தலைவர் ஜெங் ஷாஞ்ஜியே (Zheng Shanjie) ஆகியோருக்கிடையே இந்த இரு புரிந்துணர்வு உடன்பாடுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதன் வழி, நகரங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்க மலேசியா NDRC-உடன் இணைந்து இலக்கவியல் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளது.
அதோடு இலக்கவியல் பொருளாதாரம் தொடர்பான கூட்டு பணிக்குழுவும் உருவாக்கப்படும், இதில் சீனாவின் தேசிய தரவுத் துறை மற்றும் மலேசிய இலக்கவியல் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி இலக்கவியல் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இரு தரப்பும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன.
மலேசியாவின் இலக்கவியல் மாற்றத்தை துரிதப்படுத்த மேற்கொள்ளப்படும் சரியான முயற்சி இதுவென இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னெடுக்கும் சரியான திட்டமாகவும் , மடானி அரசின் கொள்கைக்கு ஏற்புடையதாகவும் அமைவதாக கோபிந் சிங் சுட்டிக்காட்டினார்.