
கோலாலம்பூர், மே-30 – ஒரு நெடுஞ்சாலை கட்டுமானத் திட்ட ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்ட விசாரணையில், 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு நெடுஞ்சாலை கட்டுமானத்தைத் திட்டத்திற்கான Sukuk இஸ்லாமிய முறையிலான நிதி பத்திரங்களை மோசடி செய்ததன் பேரில், நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனரான தான் ஸ்ரீ பட்டம் கொண்டவர் மீது MACC விசாரணை நடத்தி வருகிறது.
அவருக்குச் சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே மேற்கண்ட பொருட்கள் சிக்கின.
பல்வேறு வர்த்தக முத்திரையிலான 217 சொகுசு கடிகாரங்களும் அவற்றிலடங்கும்.
அதன் மதிப்பே 5 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
தவிர 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 27 ஆடம்பர கைப்பைகள், 4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டன.
கிட்டத்தட்ட 7 மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள Bently, Mercedes-Benz, Range Rover மாடல்களிலான ஆடம்பர கார்களும் அதிகாரிகளிடம் சிக்கின.
தலைநகரில் 12 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆடம்பர குடியிருப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுவும் அந்த தான் ஸ்ரீ க்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.
அங்குள்ள அறையொன்றில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பிரீமியம் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டன.
இவையனைத்தும் கருப்புப் பணத்தின் மூலம் கிடைக்கப் பெற்றவை என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து MACC விசாரணையை மேலும் தீவிரப்படுத்துமென தெரிகிறது.