
செனாய், ஜோகூர், டிசம்பர் 15 – ISKCON செனாய் மற்றும் Yayasan Usaha Ventures Malaysia இணைந்து நடத்திய இந்திய சமூக கலை மற்றும் கலாச்சார விழா 2025 ஜோகூர் செனாயில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
திருவிழாவின் முக்கிய அம்சமாக மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை கிருஷ்ண பரமாத்மாவின் ரத யாத்திரை நடைபெற்றது. சுமார் 1500 பக்தர்கள் புடைசூழ அலங்கரிக்கப்பட்ட ரதமானது செனாய் உத்தமா தாமானின் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றது. இதில் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை மற்றும் பிற்பகலில் அரசுத் துறைகளின் கண்காட்சிகள் நடைபெற்றன. அதே நேரத்தில், எட்டு தமிழ் பள்ளி மாணவர்களுக்கான கல்வி போட்டிகளும் நடத்தப்பட்டு, பங்கேற்றவர்களுக்கு 50 ரிங்கிட் பணச்சீட்டும் வழங்கப்பட்டது.
மாலை நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், பங்கேற்ற எட்டு தமிழ் பள்ளிகளுக்கு தலா 1,008 ரிங்கிட் நிதி உதவியும் வழங்கப்பட்டது.
கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சமூக ஒற்றுமையை ஒரே மேடையில் இணைத்த இந்த விழா, செனாயில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்ததென்றால் அது மிகையாகாது.



