
ஜோகூர் பாரு ,செப் 4 – ஜோகூர் பாருவில் தனது காருக்குள் சூரிய கரடி வைத்திருந்த 22 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் அந்த விலங்கை வைத்திருப்பதற்கும், பராமரிப்பதற்கும் எந்தவொரு உரிமத்தையும் அல்லது எழுத்துப்பூர்வ அனுமதியையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் என்பது கண்டறியப்பட்டது .
பண்டார் ஸ்ரீ அலாமிற்கு அருகேயுள்ள காட்டு ஓரத்தில் ஜோகூர் மாநில தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத்துறையின் ஒத்துழைப்போடு நேற்று மதியம் மணி 12.35 அளவில் காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த சூரிய கரடி கண்டுப்பிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் சேமப்படை பிரிவின் தலைவர் மூத்த துணை கமிஷனர் ரோஸ்லி யூசோப் (Rosli Yusof ) தெரிவித்தார்.
அந்த கரடியுடன் 70,000 ரிங்கிட் மதிப்புள்ள ஒரு கார் , அந்த விலங்கை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கூண்டு மற்றும் கைதொலைபேசி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்த்தின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாசரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இஸ்கந்தர் புத்ரியைச் சேர்ந்த அந்த சந்தேக நபர் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வனவிலங்குகள் சம்பந்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதில் போலீஸ் படை , குறிப்பாக கூட்டரசு சேமப்படையின் உறுதிப்பாட்டை ஒருங்கிணைந்த இந்த நடவடிக்கை நிரூபித்ததாக ரோஸ்லி கூறினார்.