
ஜோகூர் பாருவில் பதின்ம வயது பையன் துன்புறுத்தல்; 4 பேர் கைது
ஜோகூர் பாரு, பிப்ரவரி-10,
ஜோகூர் பாரு, கம்போங் மெலாயு மஜிடியில் நிகழ்ந்த பகடிவதை தொடர்பில், பதின்ம வயது பையன்கள் நால்வரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
14 மற்றும் 15 வயதிலான அவர்கள் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் கூறியது.
முன்னதாக வைரலான 23 வினாடி CCTV காட்சியில், அந்நால்வரும் தரையில் படுத்திருந்த பையன் மீது தீப்பொறி என நம்பப்படும் பிரகாசமான ஒளியைப் பாய்ச்சுவதை காண முடிந்தது.
அப்பையனின் கைகள் கட்டப்பட்டிருந்தது போலவும் தெரிந்தது.
ஒரு கட்டத்தில் நண்பர்களில் மூவர், பாதிக்கப்பட்டவரை நெருங்கி, அவரை தூக்கிச் செல்வதும் மற்றொருவரோ யாரும் பார்க்கிறார்களா என்பதை கண்காணிக்கும் காவலாளியாக செயல்பட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், பாதிக்கப்பட்ட பையனின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை.



