
வாஷிங்டன், மே-28 – எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து அமெரிக்க வான்வெளியைப் பாதுகாக்கும் தனது உத்தேச ‘கோல்டன் டோம்’ தற்காப்பு கவசத் திட்டம் கனடாவுக்கு இலவசம் என அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்பாக கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக அதாவது 51-ஆவது மாநிலமாக இணைய வேண்டும் என ‘சாத்தியமில்லாத’ நிபந்தனையை அவர் விதித்துள்ளார்.
தனி நாடாகத் தொடருவதென்றால், இத்திட்டத்தில் இணைய கனடா 61 பில்லியன் டாலரை செலுத்த வேண்டியிருக்கும் என்றார் அவர்.
தனது பரிந்துரையை கனடா பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
எனினும் டிரம்பின் இப்பேச்சு குறித்து கனடா இன்னும் கருத்துரைக்கவில்லை.
இந்த அதி நவீன் வான் பாதுகாப்புத் திட்டத்தில் இணைய உண்மையில் கனடாவுக்கும் விருப்பம் தான்.
எனினும் அதற்காக நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகு வைக்க முடியாது என்பதில் கனடிய அரசாங்கம் உறுதியாக உள்ளது.
175 பில்லியன் டாலர் செலவிலான அந்தக் ‘கனவுத் திட்டம்’, தனது நான்காண்டு கால ஆட்சி 2029-ல் முடிவடையும் போது செயல்படத் தொடங்கும் என கடந்த வாரம் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த ‘கோல்டன் டோம்’ ஏவுகணைத் திட்டம் சாத்தியமானால் எதிரிகள் வானிலேயே தூக்கி எறியப்படுவர்; இதில் 100 விழுக்காடு வெற்றி உறுதி என டிரம்ப் கூறி வருகிறார்.
ஆனால் அது அவர் நினைப்பது போல் சுலபமல்ல; பெரிய நிதி ஒதுக்கீட்டைப் பெறுவது உள்ளிட்ட பல சவால்களை அவர் கடக்க வேண்டும்.
என்றாலும் எப்படியாவது அதை நிறைவேற்றி விட்டே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் கங்கணம் கட்டியுள்ளார்.
ஆனால், அவர் அமெரிக்காவைப் பாதுகாப்பாரோ இல்லையோ, கனடாவை நிச்சயம் ‘கூறு’ போட்டு விட்டு தான் அதிபர் பதவியை நிறைவுச் செய்வார் என, டிரம்ப்பின் குணமறிந்தவர்கள் கூறுகின்றனர்.