
சுஷோவ், ஏப் 18 – சீனாவில் SuZhou விலுள்ள தனது வீட்டில் 11 வயது சிறுவன் ஒருவன் 100 கிரேம் எடையுள்ள தங்கக் கட்டியை தவறுதலாக விழுங்கியதைத் தொடர்ந்து அவனுக்கு கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடக்கத்தில் அவனது வயிறு சிறிது உப்பிய போதிலும் அச்சிறுவன் கடுமையான வலி எதனையும் எதிர்நோக்கவில்லை.
எனினும் அச்சிறுவனை உடனடியாக Soochow பல்கலைக்கழக சிறார் மருத்துமனைக்கு அவனது பெற்றோர்கள் கொண்டுச் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில் அச்சிறுவனின் செரிமானப் பாதையின் நடுவில் ஒரு திடமான உலோகப் பொருள் சிக்கியிருப்பதோடு அது குடலில் ஒட்டிக்கொண்டு சிறிது காயத்தையும் ஏற்படுத்தியிருப்பதும் தெரியவந்தது.
அச்சிறுவனுக்கு கடுமையான வலிக்கான அறிகுறிகள் இல்லை என்றாலும், தங்கக் கட்டி இயற்கையாகவே வெளியேற்றப்படும் என்ற நம்பிக்கையில் மருத்துவர் வலி நிவாரணிகளைக் கொடுத்தார்.
இரண்டு நாட்களாகியும் தங்கக் கட்டி வெளியேறாமல் தொடர்ந்து வயிற்றில் அதே இடத்தில் இருப்பதை உறுதிசெய்யப்பட்டது. இதனால் குடலில் அடைப்பு அல்லது கசிவு போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்தது. நிலைமை மோசமடைவதைத் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
நோயாளியின் இளம் வயது மற்றும் அதிக உணர்திறன் வாய்ந்த குடல் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் குழுவினர் , கேமரா மற்றும் உயர் அதிர்வெண் ஒலி அலைகளைப் பயன்படுத்தும் குறைந்தபட்ச ஊடுருவும் எண்டோஸ்கோபிக் முறையைத் தேர்ந்தெடுத்து எந்த சிக்கலும் இல்லாமல் 30 நிமிடங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக தங்கக் கட்டியை அகற்றினர். அந்த சிறுவன் குணமடைந்துவிட்டதால் மறுநாள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டான்.
அந்த தங்கக் கட்டியை அச்சிறுவனின் குடும்பத்தினரிடமே மருத்துவர்கள் கொடுத்துவிட்டனர்