
கோலாலம்பூர், மே-5, மலாக்கா, அலோர் காஜா GiatMARA கல்லூரியில் மாற்றுத் திறனாளி பயிற்சி மாணவர் பகடிவதை செய்யப்பட்டதாக வைரலான சம்பவம் விசாரிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட நபர் உள்ளிட்டவர்கள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக, MARA தலைவர் டத்தோ அஷ்ரஃப் வஜ்டி டுசுக்கி கூறினார்.
அச்சம்பவமானது, முன்பு பயிற்சியின் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட சற்று எல்லை மீறிய கேலியும் கிண்டலுமே என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது அவர்கள் அனைவரும் வெல்டிங் தொழில்நுட்பம் மற்றும் உலோக உற்பத்தியில் தொழில்துறை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எது எப்படி இருப்பினும் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ எந்தவொரு பகடிவதை சம்பவங்களையும் MARA அனுசரித்து செல்லாது என அஷ்ரஃப் திட்டவட்டமாகக் கூறினார்.
அலோர் காஜா GiatMARA கல்லூரியில் படிப்பில் பின்தங்கிய இரகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் பகடிவதைக்கு ஆளானதாக, ஓர் இளைஞர் 2 நிமிடங்கள் பேசி வெளியிட்ட வீடியோ முன்னதாக வைரலானது.
பூப்பந்து விளையாடும் போது அறிமுகமான அந்த மாற்றுத்திறனாளி தன்னிடம் அவ்விஷயத்தைதக் கூறியதாக அவ்விளைஞர் அந்த வீடியோவில் சொல்லியிருந்தார்.
உடன் இணைக்கப்பட்டிருந்த வீடியோவில், அந்த மாற்றுத்திறனாளி தரையில் படுத்திருப்பதையும், தன்னை நோக்கி வெள்ளை நிற பொருளொன்று வீசப்படுவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைவதும் தெரிந்தது