
கோலாலம்பூர், ஏப்ரல்15, தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ரோபோட்டிக் துறையில் சிறந்து விளங்க வேண்டுமென்ற நல்ல நோக்கில், மலேசிய மக்கள் நல சேவை இயக்கம் மாபெரும் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்கக் கூடிய அம்மாபெரும் புரட்சித் திட்டத்திற்கு Celik Robotic என பெயரிடப்பட்டுள்ளது.
நம்மின மாணவர்கள் அத்துறையில் தங்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர ஏதுவாக, முறையான திட்டமிடலோடு ஜூன் மாத வாக்கில் அப்போட்டி நடைபெறுவதாக ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர்.
பள்ளிகளில், ரோபோட்டிக் பாடம் ஓர் அங்கமாக உள்ள போதும், அத்துறையில் நம் மாணவர்களின் பங்கு குறைவாகவே உள்ளது.
எனவே, அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது
அதற்கு ஏதுவாக, பயிற்றுநர்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் மூலமாக தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையாக பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலம் தோறும் சென்று ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.
ஆசிரியர்கள் கற்றுத் தேர்ந்த பிறகு, அவர்கள் மாணவர்களுக்கு குழுவாக பயிற்சி அளிப்பர்.
போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டதும், ஜூன் மாத போட்டிக்கு மாணவர்களை ஆசிரியர்கள் தயார் படுத்தலாம்.
எனவே, இம்முயற்சிக்கு தலைமையாசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும், மாணவர்களும் ஒத்துழைப்புக் கொடுப்பர் என ஏற்பாட்டுக் குழுவினர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இப்பயிற்சி சுமூகமாக நடைபெற பொது மக்களின் நன்கொடையும் தேவைப்படுகின்றது.
நன்கொடை வழங்க விரும்புவோரும், இப்பயிற்சி குறித்த மேலதிக தகவல்களைக் பெற விரும்புவோரும், கந்தன் சுவாமிநாதனை 013-7742624 அல்லது 018-352 0711 என்ற கைப்பேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.