
செர்டாங், ஜனவரி-24 – சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு 3 வெளிநாட்டினர் சிகிச்சை பெற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அது குறித்து புகார் பெற்றதை செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் நோர்ஹிசாம் பஹாமன் (Norhizam Bahaman) உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், விசாரணைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், மேற்கொண்டு விவரங்களை அவர் வழங்கவில்லை
விசாரணை முழுமைப் பெற்றதும் போலீஸ் அறிக்கை வெளியிடுமென்றார் அவர்.
3 இந்தோனேசிய ஆடவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் செர்டாங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இன்று காலை 7.30 மணிக்கு வந்திருக்கின்றனர்.
Toyota Vios காரில் வந்த மூவரில் இருவர் ஈரமான ஆடைகளை அணிந்திருந்தனர்; மூன்றாவது நபர் boxer மட்டுமே அணிந்திருந்தார்.
ஒருவருக்கும் அடையாள ஆவணங்கள் இல்லை.
இந்நிலையில், காயங்களுக்கான காரணம் குறித்து மருத்துவமனைத் தரப்பு விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தந்துள்ளனர்;
எனினும், பரிசோதனைகளில் மூவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
நோயாளிகள் கொடுத்தத் தகவல்களும் அவர்கள் வந்திறங்கிய விதமும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகப் போலீசில் புகார் அளித்தது.