தெலுக் இந்தான், நவம்பர்-4 – தெலுக் இந்தான், கம்போங் பஹாகியா, இரயில்வே இரும்புப் பாலத்தில் வண்ணப் பூச்சுகளால் ‘கிறுக்கி’ சேதப்படுத்திய 44 வயது வேலையில்லா ஆடவர் கைதாகியுள்ளார்.
தொடக்கக் கட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக, ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர்
அஹ்மாட் அட்னான் பஸ்ரி (Ahmad Adnan Basri) தெரிவித்தார்.
இதையடுத்து பல்வேறு வண்ணங்களிலான 4 சாயத் தோம்புகளும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவத்தின் போது சந்தேக நபர் கஞ்சா உட்கொண்டிருந்ததும், ஏற்கனவே 8 குற்றப்பதிவுகளை வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.
பொது சொத்துக்களைச் சேதப்படுத்தியதற்காக 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு அவர் விசாரிக்கப்படுகிறார்.
உள்ளூர் மக்களால் ‘Geghotak Besi’ என்றும் அழைக்கப்படும் அந்த இரும்புப் பாலம், உலகப் பிரசித்திப் பெற்ற லண்டன் தேம்ஸ் நதியைக் கடந்துச் செல்லும் Charing Cross இரயில்வே பாலத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.
காலனித்துவ ஆட்சி காலத்தில் தெலுக் ஆன்சன் – தாப்போ ரோடு இரயில் வழித்தடத்தின் முக்கிய அங்கமாக அந்த இரும்புப் பாலம் விளங்கி வந்துள்ளது.