
சென்னை, அக்டோபர் -23 – தனது குழந்தையின் தொப்புள் கொடி வெட்டப்படும் வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல YouTube பிரபலம் இர்ஃபான்.
ஜூலையில் அவரின் மனைவி ஆசிஃபா குழந்தை பிரசவித்த தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் அவ்வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இர்ஃபானின் செயல், தமிழக மருத்துவச் சட்டத்தின் படி தவறு என மருத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என தமிழக மருத்துவ ஊரகப் பணி நலத்துறை தெரிவித்துள்ளது.
பிரசவத்தின் போது வீடியோ எடுக்கவும், தொப்புள் கொடியை வெட்டவும், பணியில் இருந்த மருத்துவர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்படும்.
அந்த தனியார் மருத்துவமனையின் உரிமத்தை ஏன் தற்காலிகமாக இரத்துச் செய்யக்கூடாது எனக் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
விவகாரம் சர்ச்சையானதும் இர்ஃபான் சமூக ஊடகங்களிலிருந்து வீடியோவை நீக்கிவிட்டார்.
இந்நிலையில் மன்னிப்பே கேட்டாலும், இர்ஃபான் மீது சட்ட நடவடிக்கை உறுதியென தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மருத்துவச் சட்ட விதிகளை மீறியுள்ளதால் அவர் கண்டிப்பாக நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது.
அதோடு தனியார் மருத்துவமனை, பிரசவத்திற்குத் தலைமையேற்ற மருத்துவர் மீதும் நடவடிக்கைப் பாயுமென்றார் அவர்.
கடந்த ஆண்டு, தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை துபாயில் பரிசோதித்து அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு இர்ஃபான் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.