
கோலாலம்பூர், ஏப் 24 – தனது முகநூலில் நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாத்தை மிகவும் மோசமாக சிறுமைப்படுத்தி கருத்து பதிவேற்றம் செய்த 63 வயது ஆடவர் ஒருவரிடம் தொடர்பு மற்றும் மலேசிய பல்லூடக ஆணயம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அந்த நபரிடம் ஏப்ரல் 20 ஆ தேதி இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்போடு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் அறிக்கை அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞரிடம் விளக்கம் அளிக்கப்படும். அந்த சந்தேகப் பேர்வழி தனது கருத்தை பதிவு செய்வதற்கு பயன்படுத்திய ஒரு கை தொலைபேசி மற்றும் சிம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1998ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த சந்தேக பேர்வழிக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 500,000 ரிங்கிட்வரை அபராதம அல்லது கூடிய பட்சம் 2 ஆண்டுவரை சிறை அல்லது இவையிரண்டும் விதிக்கப்படலாம். 3 ஆர் எனப்படும் சமயம், இனம் மற்றும் அரச அமைப்பு விவகாரங்களை தொடர்புப்படுத்தி சமூக வளத்தை தவறாக பயன்படுத்தும் எந்தவொரு தரப்பினரிமும் இணக்கப் போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லையென தொடர்பு மற்றும் மலேசிய பல்லூடக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.