
கோலாலம்பூர், ஏப்ரல்-19- 1998 கோலாலம்பூர் காமன்வெல்த் போட்டியில் 50 கிலோ மீட்டர் பெருநடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவரான ஜி.சரவணனின் சோகக் கதை, பிரதமரின் காதுகளுக்கும் எட்டியுள்ளது.
இதையடுத்து டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் ஃபார்ஹான் ஃபாவ்சி, கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சைப் பெற்று வரும் சரவணனை, நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இளைஞர்-விளையாட்டுத் துறை துணையமைச்சர் அடாம் அட்லியும் உடன் சென்றார்.அதன் போது பிரதமரின் நன்கொடையாக சரவணனுக்கு 10,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.
55 வயது ஜி.சரவணன், MND அல்லது Motor Neurone Disease எனப்படும் ஒருவித அரிய நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.தசைகளை பலவீனமடையச் செய்யும் அந்நோய்க்கு நிவாரணமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தினசரி வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கும் போதிய பணமின்றி அவர் சிரமப்பட்டு வருகிறார்.வணக்கம் மலேசியா கூட அவர் படும் கஷ்டங்களை நேற்று விரிவாக வீடியோவில் வெளிட்டிருந்தது.
இந்நிலையில் பிரதமர் சார்பில் சரவணனுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.பிரதமரின் அதிகாரியும் துணையமைச்சரும் மருத்துவமனைக்கே நேரில் வந்து நலம் விசாரித்தது குறித்து, சரவணன் நெகிழ்ச்சியடைந்தார்.உதவிக்கும் நன்றிக் கூறினார்