
ஜோகூர் பாரு, ஏப்ரல்-21- மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC-யும் ஜோகூர் மாநில அரசாங்கமும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டன.
ஜோகூர் பாரு மாநகர மன்றக் கோபுரத்தின் கெனாங்கா மண்டபத்தில் நடைபெற்ற அந்நிகழ்வுக்கு, மாநில இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் சிறப்பு வருகையளித்தார்.
இரு தரப்புக்குமிடையிலான ஒத்துழைப்பின் வாயிலாக, பல்வேறு முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.
டிஜிட்டல் வசதி மேம்பாடு, வியூகத்துவமிக்க இடங்களில் 5G இணையச் சேவை விரிவாக்கம், இணையக் கட்டமைப்பின் விரிவாக்கம், மக்கள் மத்தியில் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல் மற்றும் இணையப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.
இந்த முயற்சிகள் புதிய தரவு மையங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும்.
அதோடு, ஜோகூருக்கு உயர் தொழில்நுட்ப முதலீடுகளை கவர்ந்திழுக்கும்.
இது தவிர, JS-SEZ என்றழைக்கப்படும் ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் விரிவான இணையச் சேவையைக் கொண்டிருப்பதை உறுதிச் செய்யும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில், ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், மாநில அரசின் செயலாளர் தான் ஸ்ரீ Dr அஸ்மி ரொஹானி, MCMC தலைவர் தான் ஸ்ரீ மொஹமட் சாலிம் ஃபாத்தே, போக்குவரத்து-வசதிக் கட்டமைப்பு-தொடர்புத் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹமட் ஃபாஸ்லி மொஹமட் சாலே உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.