
நீலாய், டிசம்பர்-29 – நெகிரி செம்பிலான், நீலாயைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் படைப்பாற்றலில் வரலாறு படைத்துள்ளார்.
ஹெய்ரா ஜெகநாத் (Heyra Jeganath), இந்த ஐந்தே வயதில், நாட்டின் ஆக இளம் எழுத்தாளராக மலேசிய சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளியின் பாலர் வகுப்பில் படிக்கும் ஹெய்ரா, தனது முதல் ‘குழந்தைகள் புத்தகத்தை’ வெளியிட்டுள்ளார்.
தங்கை பிறந்தபோது நீண்ட நாட்களாய் தாய் மருத்துவனையில் இருந்ததால், அவரை பிரிந்திருந்த காலத்தின் உணர்ச்சிகளை ஹெய்ராவின் அப்புத்தகம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அந்நேரத்தில் தாயை நினைத்து ஹெய்ரா மிகவும் ஏங்கியுள்ளார்; பிறகு தங்கையுடன் வீடு திரும்பிய தாயிடம், அவரை பிரிந்திருந்த காலத்தில் எப்படி நேரத்தை செலவிட்டேன் என்பதை ஹெய்ரா கதை கதையாய் விவரித்துள்ளார்.
தினமும் மகள் கூறிய கதைகளை தாய் பதிவுச் செய்தார்; பின்னர் அவற்றை புத்தகமாக மாற்ற ஹெய்ரா முன்வந்தார்.
அவரது ஜெய்ராவின் பிறந்தநாளை உண்மையிலேயே மறக்கமுடியாததாக மாற்ற, அவரது தந்தை ஜெகநாத்தும் தாயார் Dr பூஜாவும் மகளின் பயணம், உணர்ச்சி வலிமை மற்றும் கதை சொல்லும் திறமையைக் கொண்டாடும் விதமாக இந்தப் புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட முடிவு செய்தனர்.
டிசம்பர் 21-ஆம் தேதியன்று, இந்த புத்தகம் வெளியிடப்பட்டு, நாட்டின் மிக இளம் எழுத்தாளர் என்ற மலேசிய சாதனைப் புத்தகத்தில் ஹெய்ரா இடம்பெற்றார்.
இச்சாதனை, வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கிறது.
ஊக்கமும் ஆதரவும் கிடைத்தால், சிறிய மனங்களும் பெரிய கனவுகளை நனவாக்க முடியும்…



