
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-20- பினாங்கு, பட்டவொர்த்தில் கண் வடிவிலான ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கிக் கொண்டதால், 10 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மொஹமட் ஃபாஹ்மி ஹஃபிஸ் மொஹமட் ஃபாக்ருடின் (Mohamad Fahmi Hafiz Mohamad Fakhruddin), சுங்கை டுவா, KAFA சமய வகுப்பில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மயங்கி விழுந்தான்.
இதையடுத்து அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பினாங்கு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அந்த சமய வகுப்புக்கு அருகிலிருக்கும் ஒரு கடையிலிருந்து அவன் அந்த ஜெல்லி மிட்டாய்களை வாங்கியதாகத் தெரிகிறது.
நேற்று காலை வரைக்குமான நிலவரப்படி, அச்சிறுவனது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
வெள்ளிக்கிழமை வரை இதே நிலை நீடித்தால் அனைத்து மருந்துகளும் நிறுத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இனி கடவுளை தான் நம்பியுள்ளோம் என ஃபாஹ்மியின் அத்தை கூறினார்.
மகனுக்கு நேர்ந்த சம்பவத்தால் ஃபாஹ்மியின் பெற்றோர் பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.