
அலோர் ஸ்டார், ஏப்ரல்-28, கெடா, யானில் முகாம் தளத்தில் பரவிய மர்ம தொற்று, முதலில் பயந்தது போல் மோசமாக இல்லை.
மாநில சுகாதாரத் துறையின் விளக்கமளிப்புக்குப் பிறகு, வீடமைப்பு, ஊராட்சி மன்றம், சுகாதாரம் ஆகியத் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மன்சோர் சக்காரியா அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
உடல் உபாதைகளுக்கு ஆளான 39 மாணவர்கள் மற்றும் பணியாளர்களில் இருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அந்த இருவர் முறையே 14 வயது மாணவர் மற்றும் 30 வயது பேருந்து ஓட்டுநர் ஆவர்.
இருவரும் குணமடைந்து வருகின்றனர்; முதலில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர்கள் உள்ளிட்ட மற்ற மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றார் அவர்.
காய்ச்சல், இருமல், சொறி போன்ற அறிகுறிகளைக் கொண்ட இத்தொற்று உண்மையில் என்ன நோய் என்பது இன்னமும் மர்மாகவே உள்ளது.
என்றாலும், நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
எனவே, எந்தவொரு யூகங்களையும் எழுப்பாமல் பொது மக்கள் நிதானம் காக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்