பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைபாட்டை விளக்க வெளிநாடுகளுக்குப் பேராளர்கள் குழுவை அனுப்பும் இந்தியா; பட்டியலில் மலேசியாவும் உண்டு

புது டெல்லி, மே-18- பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவும், இந்தியாவின் நிலைப்பாட்டை உலகிற்கு விளக்கிடவும் ஏதுவாக, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இந்தியா அனுப்புகிறது.
இம்மாதக் கடைசியில் உலகின் முக்கிய நகரங்களுக்கு மொத்தமாக 7 பேராளர் குழுக்களை புது டெல்லி அனுப்புகிறது.
அதில் ஆளுங்கட்சி எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் அண்மைய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கைக் குறித்து பங்காளி நாடுகளுக்கு விளக்குவதும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய தேசத்தின் ஒருமித்த நிலைபாட்டை மறுஉறுதிப்படுத்துவதுமே, அப்பயணத்தின் நோக்கமாகும்.
அவ்வகையில் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 7 பேரடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பயணமாகிறது.
சஞ்சய் குமார் ஜா அக்குழுவுக்குத் தலைமையேற்கிறார்.
அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கான பயணத்திற்கு பிரபல அரச தந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான Dr சஷி தரூர் தலைமையேற்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணமாகிறது.
இந்தியாவைப் போன்று பாகிஸ்தானும் உலக நாடுகளுக்குப் பேராளர் குழுக்களை அனுப்ப முடிவுச் செய்துள்ளது.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவால் புட்டோ-சர்தாரியை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அப்பணிக்கு நியமித்துள்ளார்.
பிலாவால் வேறு யாருமல்ல, பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பெண் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகனாவார்.
4 நாட்கள் நீடித்த இந்திய இராணுவத்தின் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து வந்த பாகிஸ்தான், தற்போது இந்தியாவைப் பின்பற்றி தன் பக்க ‘நியாயத்தைக்’ கூற புறப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.