
புத்ராஜெயா, ஜூன்-5 – நாட்டிலுள்ள பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஏற்பட்டுள்ள நெரிசல் பிரச்னையைக் கையாள, கல்வி அமைச்சு உறுதி பூண்டுள்ளது.
அவ்வகையில் 7 மாநிலங்களில் 121 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பிற வசதிகள் கட்டப்படவிருக்கின்றன.
கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையில், கூடுதல் வகுப்பறைகள், PAP எனப்படும் முன்-அங்கீகரிக்கப்பட்ட திட்டத்துடன் தொழில்துறை கட்டட அமைப்பு முறையைப் பயன்படுத்தி கட்டப்படும் என கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
88 மில்லியன் ரிங்கிட் செலவில் தளவாடங்கள், கற்றல் – கற்பித்தலுக்கான உபகரணங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் போன்ற துணை உள்கட்டமைப்பு வசதிகளும் அவற்றில் அடங்கும்,
நடப்பாண்டிலேயே அவற்றை கட்டி முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் 103 பள்ளிகள், பேராக்கில் 8, பகாங்கில் 4, நெகிரி செம்பிலானில் 3, திரங்கானுவில் 1, கோலாலம்பூரில் 1, பினாங்கு 1 என 7 மாநிலங்களில் 121 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கட்டுமானத் திட்டம் பொதுப்பணி இலாகாவான JKR மூலம் பொதுப் பணி அமைச்சால் செயல்படுத்தப்படும்.