
புத்ரா ஜெயா , அக் 13 – நாடு முழுவதும் இதுவரை சுமார் 6,000 பள்ளி மாணவர்கள் influenza எனப்படும் சளிக் காய்ச்சல் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
மேலும் மாவட்ட சுகாதார அலுவலகங்களின் ஆலோசனையின் பேரில் பல பள்ளிகள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சுகாதார அமைச்சு வகுத்துள்ள நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி பள்ளிகள் மூடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி இயக்குநர் அசாம் அகமட் ( Azam Ahmad ) தெரிவித்தார்.
மாணவர்களிடையே influenza தொற்று பரவுவதைத் தடுக்க தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உண்மையில், கோவிட்-19 மற்றும் இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் வழிகாட்டுதல்கள் குறித்து கல்வி அமைச்சுக்கு நீண்ட அனுபவம் உள்ளது என்று சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் Azam Ahmad கூறினார்.
பள்ளி ஊழியர்கள் முகக்கவரிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அதே நேரத்தில் மாணவர்கள் குழு ரீதியிலாக பங்கேற்கும் செயல் நடவடிக்கைகளை குறைக்கவும், இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பள்ளிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.