
சிரம்பான், ஏப்ரல்-30, மாணவர்களை மேலும் பாதுகாக்க ஏதுவாக பள்ளிகளுக்கு அருகே வேகக் கட்டுப்பாட்டை மணிக்கு 50-திலிருந்து 30 கிலோ மீட்டருக்கு அரசாங்கம் குறைக்கவுள்ளது.
சாலை நெரிசல் மற்றும் பாதுகாப்பு மீதான அமைச்சரவைக் குழுவின் அம்முடிவை அடுத்து, அப்புதிய விதிமுறை விரைவில் அரசுப் பதிவேட்டில் இடம் பெறவிருப்பதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
வேகக் கட்டுப்பாட்டை மணிக்கு 30 கிலோ மீட்டராகக் குறைப்பது, சாலை விபத்துகளில் மரணங்களைக் கணிசமாகக் குறைப்பதாக தரவு ஆதாரங்கள் காட்டுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
மணிக்கு ஒவ்வொரு 10 கிலோ மீட்டர் அதிகரிக்க அதிகரிக்க, மரண ஆபத்தும் அதிகரிப்பதாக அந்தோணி லோக் சொன்னார்.
மலேசிய சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்குத் தலைமைத் தாங்கிய பிறகு அவர் அதனைத் தெரிவித்தார்.
வேகக் கட்டுப்பாட்டை குறைக்கும் அதே சமயம் பள்ளி வளாகங்களில் சாலை வசதிக் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும்.
எச்சரிக்கைப் பலகைகளை பொருத்துதல், சாலை பயனர்கள் மெதுவாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்க மஞ்சள் கோடுகளை வரைதல் உள்ளிட்டவையும் அவற்றிலடங்கும்.
பள்ளிகளுக்கு அருகே ஆண்டுதோறும் சராசரியாக 70 மரண விபத்துகள் நிகழுவதையும் அந்தோணி லோக் மேற்கோள் காட்டினார்