
ஈப்போ, மார்ச் 18 – வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 331.8 ஆவது கிலோமீட்டரில் மணல் ஏற்றியிருந்த டிரெய்லர் லோரி ஒன்று பஞ்சு ஏற்றியிருந்த டிரெய்லர் லோரியின் பின்னால் மோதி தீப்பிடித்ததில் தந்தையும் அவரது மகனும் உயிரிழந்தனர்.
இந்த பரிதாப சம்பவம் இன்று காலை மணி மணி 7.46 அளவில் நடந்ததாக பேரா தீயைணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைகளுக்கான துணை இயக்குநர் சுபரோட்ஷி நோர் அகமட் ( Subarodzi Nor Ahmad ) தெரிவித்தார்.
சம்பவம் அறிந்தவுடன் பீடோர் (Bidor) தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தீக்குள்ளான மணல் லோரியில் 40 வயதுடைய லோரி ஓட்டுநர் சிக்கிக் கொண்ட வேளையில் அவரது 20 வயதுடைய மகனும் தீயில் சிக்கி இறந்தார்.
அவ்விருவரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைத்ததாக சுபரோட்ஷி நோர் அகமட் கூறினார்.