
அஹமாதாபாத், ஜூன்-12 – இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட வேகத்தில் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 242 பேரின் கதி கேள்விக் குறியாகியுள்ளது.
பயங்கர சத்தத்துடன் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
242 பேரில் 12 பேர் விமானப் பணியாளர்கள், மற்றவர்கள் பயணிகள் ஆவர்.
பயணிகளில் 169 பேர் இந்தியப் பிரஜைகள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுகீசியர்கள், ஒருவர் கனடா நாட்டவர் என ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் விஜய் ரூபாணியும் விமானத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் மீட்புக் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இத்துயரச் சம்பவத்தை அடுத்து சர்தார் வல்லபாய் பட்டீல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.