
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 12 – மலேசியர்கள் அல்லாதவர்களை மலேசியா குடிமக்களாக பதிவு செய்து போலி ஆவணங்களை வெளியிட்டு வந்த மோசடி கும்பலை முறியடிக்க , “Op Outlander” மற்றும் “Op Birth” எனும் இரண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC.
ஜோகூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கிளினிக்குகள் மற்றும் வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் முக்கியமாக இந்த நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டதாக MACCயின் துணைத் தலைமை ஆணையர் அகமட் குசாய்ரி யாஹியா (Ahmad Khusairi Yahaya ) தெரிவித்துள்ளார்.
இதில் அரசு அதிகாரி ஒருவர் முக்கிய குற்றவாளியாக
கருதப்படும் நிலையில் அவர் பிறப்புக்கு 60 நாட்கள் அல்லது தாமதப்படுத்தப்பட்ட பிறப்புப் பதிவுகளை எளிதாக்குவதில் அவர் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதே சமயத்தில், பல கிளினிக்குகளையும் பிரசவ கிளினிக்குகளையும் நடத்தி வரும் டத்தோ பட்டம் கொண்ட ஒரு மருத்துவரும் போலி பிறப்பு பத்திரம் வழங்குவதில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படுவதாக MACC தெரிவித்துள்ளது.
இந்த மோசடியில், முகவர்களாக செயல்படும் ஆடவர் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட போலி பிறப்பு கடிதத்தை பயன்படுத்தி பிறப்பு பத்திரத்தை பெற்றுத் தர அரசு அதிகாரிகளுக்கு 18,000 ரிங்கிட் வரை லஞ்சம் கொடுப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையில் முகவர்களின் சேவையை பயன்படுத்திய 6 நபர்களும் கைதாகியுள்ளனர்.
கைதான இருவர் MACC ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அரசுத் துறைகளில் ஊழலை ஒழிக்கவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவும் MACC முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருவதை அகமட் குசாய்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.