
கோலாலம்பூர், மார்ச்-20 – ஜாலான் மஸ்ஜித் இந்தியா ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் உடைக்கப்படாது.
மாறாக, சுமூகமான முறையில் ஆலயத்தை இடமாற்ற 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, அந்த தனியார் நிலத்துக்குச் சொந்தக்காரர்களான Jakel Trading Sdn Bhd ஜவுளி நிறுவனம் கூறியுள்ளது.
DBKL-லிடமிருந்து அந்நிலத்தைக் கையகப்படுத்தியது முதல், சுமூகமானத் தீர்வை எட்டுவதற்காக ஆலய நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பதாக Jakel நிறுவனத்தின் சட்ட மற்றும் தொடர்புப் பிரிவு அதிகாரி ஐமான் டாசுகி (Aiman Dazuki) கூறினார்.
பேச்சுவார்த்தை இன்னமும் தொடருகிறது; ஆனால் கோயில் உடைக்கப்படாது என்பது மட்டும் உறுதி என்றார் அவர்.
இது ஓர் உணர்ச்சிப்பூர்வமான விஷயம் என்பதை நாங்களும் அறிவோம்; இரு தரப்புக்கும் இணக்கமான ஒரு முடிவு எடுக்கப்படுவதையே நாங்கள் விரும்புகிறோம் என ஐமான் சொன்னார்.
இவ்வேளையில், மார்ச் 27-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழாவுக்குத் திட்டமிடப்பட்டிருப்பது குறித்து கருத்துரைத்த அவர், அதற்காக பள்ளிவாசலின் நிர்மாணிப்பு உடனடியாகத் தொடங்கும் என அர்த்தமில்லை என்றார்.
மாறாக, புதியக் கட்டுமானத்துக்கான எங்கள் நிறுவனத்தின் கடப்பாட்டின் அடையாளமே என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐமான் தெளிவுப்படுத்தினார்.
இவ்வேளையில், இந்த ஆலய இடமாற்ற விவகாரம் இன்னமும் பேச்சுவார்த்தையிலேயே உள்ளதாகவும், DBKL பொருத்தமான சில இடங்களைப் பரிந்துரை செய்திருப்பதாகவும், Jakel நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டத்தோ சையிட் நஸ்ருல் ஃபாஹ்மி சையிட் முஹமட் (Datuk Syed Nasrul Fahmi Syed Muhamad) தெரிவித்தார்.
என்றாலும், இன்னும் உடன்பாடு எட்டவில்லை என அவர் சொன்னார்.
முன்னதாக, அக்கோயில் உடைக்கப்படாது என்றும், மாறாக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளின் ஒப்புதலோடு இடமாற்றம் செய்யப்படுமென்றும், கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ மைமூனா மொஹமட் ஷாரிஃப் ( Datuk Seri Maimunah Mohd Sharif ) கூறியிருந்தார்.
இடமாற்றம் நிறைவடையும் வரை இப்போது இருக்கும் இடத்திலேயே அக்கோலியில் வழக்கம் போல் செயல்பட்டு வரலாமென அவர் சொன்னார்.