Latestமலேசியா

தனிப்பட்ட தரவுகள் MCMC-யிடம் பகிரப்படாது; தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மறுஉத்தரவாதம்

கோலாலம்பூர், ஜூன்-9 – அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நோக்கங்களுக்காக MCMC எனப்படும் மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையம் கைப்பேசிகளின் தரவுகளைக் கோரியிருப்பதை அடுத்து, முன்னணி
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதில் தங்கள் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியுள்ளன.

அவ்கையில் வாடிக்கையாளர் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியவை தங்களின் முதன்மையான முன்னுரிமைகள் என U Mobile Sdn Bhd அறிக்கையில் கூறியது.

“எங்களைப் பொறுத்தவரை, பகிரப்படும் எந்தவொரு தரவும் முழுமையாக அநாமதேயமாக்கப்படுவதையும், ஒருங்கிணைக்கப்படுவதையும், உரிய தரவு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி கையாளப்படுவதையும் உறுதிச் செய்வதற்கான கொள்கைகளும் செயல்முறைகளும் நடைமுறையில் உள்ளன”

“எனவே வாடிக்கையாளர் தரவு மேலாண்மையில் மிக உயர்ந்த தரக் கட்டுப்பாட்டை உறுதிச் செய்து MCMC-யுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்” என U Mobile தெரிவித்தது.

MCMC-க்கு சமர்ப்பிக்கப்பட்ட கைப்பேசி தரவுகள் பெயர் குறிப்பிடப்படாத வடிவத்தில் உள்ளதோடு அதில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலும் இல்லை என Telekom Malaysia Bhd (TM) தெளிவுபடுத்தியது.

வாடிக்கையாளர் தரவின் நேர்மையை சமரசம் செய்யாமல் அரசாங்க முயற்சிகளை ஆதரிக்க MCMC-யுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதாக CelcomDigi Bhd வெளியிட்ட அறிக்கைக் கூறியது.

இதனிடையே, தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பிற்கு தாங்கள் முன்னுரிமை அளிப்பதால், எந்த மட்டத்திலும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை செயலாக்கவோ அல்லது பகிரவோ அணுகல் இல்லை என்று Maxis Bhd தெரிவித்துள்ளது.

“அனைத்து தரவுகளும் Maxis-சால் இரகசியமாக வைக்கப்பட்டு, 2010 தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தை முழுமையாகப் பின்பற்றி பாதுகாப்பான சூழலில் ஒட்டுமொத்தமாக செயலாக்கப்படுவதாக Maxis தெரிவித்தது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து தரவுகளைச் சேகரிப்பதானது, தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலையும் அணுகுதல் செயலாக்குதல் அல்லது வெளிப்படுத்துதல் என எதையும் உட்படுத்தவில்லை என்று, MCMC-யும் முன்னதாக தெளிவுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மாறாக ICT எனப்படும் தொலைத்தொடர்பு – தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை ஆகிய இரு முக்கியக் களங்களில் சான்றுகள் சார்ந்த கொள்கை உருவாக்கத்தை ஆதரிக்க அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை உருவாக்குவதற்கு மட்டுமே அவை பயன்படுத்தப்படும் என MCMC கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!