
கோலாலம்பூர், பிப்ரவரி-8 – தெக்குன் நேஷனல் வரலாற்றிலேயே மிக அதிகமாக இவ்வாண்டு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்ட இரண்டே வாரங்களில், 143 இந்தியத் தொழில்முனைவோர் பயன்பெற்றுள்ளனர்.
SPUMI மற்றும் SPUMI Goes Big திட்டங்கள் வாயிலாக அக்கடனுதவி வழங்கப்பட்டதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவற்றில் 555,000 ரிங்கிட் SPUMI Goes Big திட்டத்தின் கீழ் 14 பேருக்கு வழங்கப்பட்டது; எஞ்சிய 3.061 மில்லியன் ரிங்கிட் SPUMI திட்டத்தின் கீழ் 129 இந்தியத் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டது.
SPUMI மற்றும் SPUMI Goes Big திட்ட அமுலாக்கங்களின் கண்காணிப்புப் கூட்டத்துக்குத் தலைமையேற்ற பிறகு டத்தோ ஸ்ரீ ரமணன் அதனை அறிவித்தார்.
இந்த 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு முறையாகவும் நல்ல திட்டமிடலோடும் உரியவர்களுக்குக் கிடைப்பது உறுதிச் செய்யப்படும்.
அதனால் தான் மாதந்தோறும் தாமே நேரடியாக இறங்கி அமுலாக்கத்தைக் கண்காணிப்பதாக அவர் சொன்னார்.
இந்தியத் தொழில்முனைவோரின் கரங்களை வலுப்படுத்தும் முயற்சியில் தெக்குன் – ஸ்பூமி கடனுதவித் திட்டத்திற்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை, பொங்கல் தினத்தன்று ரமணன் அறிவித்திருந்தார்.
இதன் வழி நாடு முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழில் முனைவோர் பயனடைவர்.
இவ்விருத் திட்டங்கள் வாயிலாக கடனுதவிக்கு விண்ணப்பிக்கும் இந்தியத் தொழில்முனைவர்களுக்கு ஏழே நாட்களில் முடிவு தெரியும்.
அடையாள அட்டை நகல், SSM பதிவுச் சான்றிதழ், வங்கிக் கணக்கறிக்கை, வணிகப் புகைப்படங்கள், LHDN பதிவு பாரம் போன்ற ஆவணங்கள், விண்ணப்பப் படிவங்களுடன் வர வேண்டும்.