
டாக்கா, நவம்பர்-4 – 850 மில்லியன் டாலர் கட்டண பாக்கியால், வங்காளதேசத்திற்கான எல்லைகடந்த மின்சார விநியோகத்தை, இந்தியாவின் பிரபல அதானி நிறுவனம் பாதியாகக் குறைத்துள்ளது.
இதனால், மின்வெட்டுப் பிரச்னையைச் சமாளிக்க டாக்கா திணறி வருகிறது.
வங்காளதேசத்தின் மின்சாரத் தேவையில் 7 முதல் 10 விழுக்காடு வரை வழங்கி வரும் அதானி, மலைப் போல் அதிகரித்துள்ள கடனைத் திருப்பிச் செலுத்துமாறு செப்டம்பரிலேயே டாக்காவை எச்சரித்திருந்தது.
எனினும் பெரும் அரசியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு தற்போது தான் அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் வங்காளதேசத்துக்கு அது சாத்தியமாகப் படவில்லை.
கட்டண பாக்கியை ஒரேடியாகத் திருப்பிச் செலுத்தும் நிலையில் நாங்கள் இல்லை; படிப்படியாகத்தான் அதனைக் கட்ட முடியுமென்பதால், அதானி நிறுவனத்துடன் பேசி வருகிறோம் என வங்காளதேச எரிசக்தி மேம்பாட்டு வாரியம் கூறியது.
அக்டோபரில் கூட 97 மில்லியன் டாலரைச் செலுத்தியுள்ளோம் என அவ்வாரியம் தெரிவித்தது.
இந்நிலையில் 170 மில்லியன் மக்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்ய வங்காளதேசம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.