
கோலாலம்பூர், மே 19- நேற்று, சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, மலேசிய அருங்காட்சியகத் துறையின் (Jabatan Muzium Malaysia ) கீழ் உள்ள 19 அருங்காட்சியகங்களும் இலவசமாகத் திறக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் அருங்காட்சியகங்களில் குவிந்தனர்.
நமது நாட்டின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களான தேசிய அருங்காட்சியகம், கெடா புஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் மலாக்காவிலிருக்கும் மலேசிய கட்டிடக்கலை அருங்காட்சியகம் போன்றவற்றிற்கு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் நேற்று வருகைப்புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று, மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட ‘ஆசியான் கேலரி’-இல் நடைபெற்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க, பல்வேறு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்த தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிகள் (volunteer tour guides) வழங்கப்பட்டதாக மலேசிய அருங்காட்சியகத் துறையின் உதவி கண்காணிப்பாளர் சித்தி ஜுமியா அப்துல் ரசாக் (Siti Jumiah Abdul Razak) தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள, அருங்காட்சியகங்களுக்கு வருகைப் புரிந்த பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்ககளை மலேசிய அருங்காட்சியகத் துறை வெகுவாக பாராட்டியுள்ளது.