
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24 – ம.இ.கா. தலைமையகக் கட்டிட நேதாஜி அரங்கில் நாடு தழுவிய அளவில் சுமார் 150 பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிலரங்கம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
ம.இ.கா தேசிய மகளிர் பிரிவின் தலைவி சரஸ்வதி நல்லதம்பி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இப்பயிலரங்கை, சிங்கப்பூர்ப் பல்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் மூத்த விரிவுரையாளரும் ASTI இளம் ஆய்வாளர் அறிவியல் விழா ஆலோசகருமான முனைவர் சுப்பிரமணியம் குருசாமி மற்றும் ஜொகூர் தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் கல்விக் கழகத்தின் முன்னாள் விரிவுரைஞர் சேதுபதி இராமசாமி ஆகியோர் வழிநடத்தினர்.
இந்த ஒரு நாள் பயிலரங்கை மாலை 4.00 மணிக்கு ம. இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் நிறைவுச் செய்து வைத்தார்.
அவர் தமதுரையில் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பயிற்சியை ஏற்பாடு செய்த ம.இ.கா மகளிர் பிரிவை வெகுவாகப் பாராட்டினார்.
இது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து மாநில அளவில் நடத்த ம.இ.கா. நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயிற்சியை முடித்த பாலர் பள்ளி ஆசிரியைகளுக்கு அவர் சான்றிதழ்களையும் எடுத்து வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில் ஜோகூர் தமிழ்க்கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்ப்பள்ளியே நம் அடையாளம்’ என்ற வாகன ஒட்டுவில்லைகளையும் விக்னேஸ்வரன் வெளியீடு செய்தார்.
நிறைவு விழாவில் இயக்கத்தின் தலைவர் கல்விச் செம்மல் நடராஜா சி. காளிமுத்து, கே. பூபாலன், தாயாபு சப்ரினா மொய்டின், தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பாஸ்கரன் சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் கலந்துச் சிறப்பித்தனர்.
ம.இ.காவின் உயர் மட்டத்தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களும் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.