
புத்ராஜெயா, ஜூன்-10 – தனது முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ராவுத்தர் தனக்கெதிராக தொடுத்துள்ள சிவில் வழக்கை ஒத்தி வைக்கக் கோருவதில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றிப் பெற்றுள்ளார்.
அன்வார் செய்துள்ள ஒரு விண்ணப்பம் ஜூலை 21-ஆம் தேதி செவிமெடுக்கப்படும் வரை, தற்காலிகமாக அவ்வழக்கை ஒத்தி வைக்க புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
“தனது விண்ணப்பத்தை நியாயப்படுத்த அன்வார் அசாதாரணமான சூழ்நிலையை மேற்கோள்காட்டியுள்ளார். எனவே எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு அவரின் விண்ணப்பத்தை ஏற்கிறோம்” என்று மூவரடங்கிய நீதிபதி குழுவுக்குத் தலைமையேற்ற Supang Lian தெரிவித்தார்.
எனவே, உயர் நீதிமன்றத்தில் வர வேண்டிய விசாரணையை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அவர் தீர்ப்பளித்தார்.
கடந்த வாரம், நீதிமன்ற வழக்குகளிலிருந்து நாட்டின் பிரதமர் விலக்குப் பெற முடியுமா என்பது உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்திடம் பதில் கோரும் முயற்சியில், டத்தோ ஸ்ரீ அன்வார் தோல்வி கண்டார்.
இதையடுத்து திட்டமிட்டபடி ராவுத்தர் வழக்கு ஜூன் 16 முதல் 25 வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
எனினும், தமது விண்ணப்பத்தை நிராகரித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அன்வார் மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.
அதில் தீர்ப்பு வரும் வரை தனக்கெதிரான சிவில் வழக்கு விசாரணை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென அன்வார் செய்திருந்த விண்ணப்பத்தில் தான் இன்று அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது.
அன்வார் பிரதமராவதற்கு முன்பு, அதாவது 2018 அக்டோபரில் செகாம்புட்டில் உள்ள அவரது வீட்டில் தாம் தாக்கப்பட்டதாகக் கூறி யூசோஃப் ராவ்தர் அவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.