ரஜினியின் கூலி படம் வெளியீடு; தமிழ் தொழிலாளர்களுக்கு அலவுன்சுடன் விடுமுறை வழங்கிய சிங்கப்பூர் நிறுவனம்

சிங்கப்பூர் , ஆகஸ்ட் 13 – நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் நாளை ஆகஸ்டு 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடு காணவுள்ள நிலையில், தனது தமிழ் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை Farmer Constructions எனும் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
முதல் காட்சிக்கான டிக்கெட்டோடு, உணவு மற்றும் பானங்களுக்கு 30 சிங்கப்பூர் டாலர் அலவுன்ஸ் தொகையை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.
இதே போன்று மற்றொரு சிங்கப்பூர் நிறுவனமான SB MART எனும் நிறுவனமும் அதே நாளில் தனது தொழிலாளர்களுக்கு சில மணிநேரங்கள் விடுப்பை அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்புகள் இணையத்தில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.இது, ஊழியர்களின் மன உளைச்சளைக் குறைக்க, நிறுவனத்தின் சமூக கடப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றென அந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதே போன்று இந்தியாவிலும் சில நிறுவனங்கள் ரஜினியின் திரைப்படத்தை பார்க்க விடுமுறையை வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.