
கோலாலம்பூர், அக்டோபர்-17,
தீபாவளி பெருநாளை வரவேற்பதற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் புத்தாடைகள் மற்றும் விருந்துடன் கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். ஆனால் எல்லா குழந்தைகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. வசதிக் குறைந்த எத்தனையோ குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் எளிய முறையில் தீபாவளியை கொண்டாடுவதற்கு பலர் உதவிக் கரங்களை நீட்டி வருகின்றனர். அந்த வகையில் பினாங்கு பெர்மத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த வசதிக் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 40 பிள்ளைகளுக்கு தனது சொந்த செலவிலேயே சிகையலங்காரம் செய்வதற்கான செலவுகளை செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஏற்றுக்கொண்டதன் மூலம் அக்குழந்தைகளை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துள்ளார்.
அதோடு அப்பள்ளியைச் சேர்ந்த வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 70 குழந்தைகளுக்கு தீபாவளி அன்பளிப்புகளையும் வழங்கி அவர்களது முகத்தில் லிங்கேஸ்வரன் புன்னகையை மலரச் செய்துள்ளார். பெருநாள் கொண்டாட்டத்தில் வசதிக்குறைந்த பிள்ளைகள் விடுபடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உதவுக்கூடிய சந்தர்ப்பம் தனக்கு கிடைத்ததோடு, மற்றவர்களும் இதுபோன்ற உதவிகளை செய்வதற்கு தூண்டுதலாக இந்த நடவடிக்கை அமையக்கூடும் என லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.