
கோலாலம்பூர், ஜூன்-5 – வங்கிக் கடன்களுக்கான மாத தவணைப் பணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வாகனங்களை இழுத்துச் செல்பவர்களுக்கு, தெளிவான வழிகாட்டி விதிமுறைகள் கொடுக்கப்பட வேண்டும்.
அதோடு முறையான தொழில்முறையைப் பயிற்சியை அவர்கள் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா வலியுறுத்தியுள்ளார்.
வாகனங்களை இழுத்துச் செல்லும் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் மக்களை பயமுறுத்தும் வகையிலேயே செயல்படுகின்றனர்.
குண்டர் கும்பல் போல் நடந்து கொண்டு, வாகன உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் அச்சுறுத்தலாக உள்ளனர்.
சட்டப்படி இயங்கும் நம் நாட்டில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என முருகையா சொன்னார்.
எனவே, வழிகாட்டிகள், பயிற்சிகளோடு, அவர்கள் பணியாற்றும் போது காட்ட ID எனப்படும் அதிகார அட்டை அணிவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
தவிர, வங்கிகளும், முறையான உரிமம் பெற்ற பாதுகாப்பு நிறுவனங்களை மட்டுமே வாகனங்களை மீட்கும் பணிக்காக நியமிக்க வேண்டும்; அதுவும் உள்துறை அமைச்சான KDN-னின் அனுமதி பெற்ற நிறுவனங்களாக அவை இருக்க வேண்டும்.
இந்நடவடிக்கைகள் மக்கள் பாதுகாப்பையும், சட்டத்தின் மரியாதையையும் உறுதிப்படுத்தும்.
அதோடு வாகன உரிமையாளர்களுக்கும், வங்கிகளுக்கும், மற்றும் பணியாளர்களுக்கும் சமநிலையான பாதுகாப்பை வழங்கும் என்றார் அவர்.