Latestஇந்தியாஉலகம்

‘மாமன்’ படம் வெற்றிப் பெற மண் சோறு சாப்பிட்ட இரசிகர்களால் நடிகர் சூரி வேதனை; வைரலாகும் வீடியோ

மதுரை, மே-17 – தான் நடித்து வெளியாகியுள்ள ‘மாமன்’ திரைப்படம் வெற்றிப் பெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட இரசிகர்கள் குறித்து, நடிகர் சூரி வேதனைத் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராக இருந்து ‘விடுதலை’, ‘விடுதலை 2’, ‘கருடன்’ போன்ற படங்களில் கதையின் நாயகனாக அசத்தியவர் சூரி; இவரின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘மாமன்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்நிலையில், அப்படம் பெரும் வெற்றிப் பெற வேண்டி சூரியின் சொந்த ஊரான மதுரையில் அவரின் இரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டனர்.

இந்த வீடியோக்கள் வைரலாகி பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன.

அது குறித்து நடிகர் சூரி அதிருப்தியுடன் பேசியுள்ள வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.

‘படமும் கதையும் இருந்தால் படம் தானாக ஓடப் போகிறது. அதை விட்டு மண் சோறு சாப்பிட்டால் படம் வெற்றிப் பெற்று விடுமா?” என அவர் கேட்டார்.

மண் சோறு சாப்பிட்டதற்கு பதிலாக 4 பேருக்கு உணவு, தண்ணீர், மோர் வாங்கிக் கொடுத்திருந்தால் அவர்களின் பசி ஆறியிருக்கும்; இந்த முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுபவர்கள் என் தம்பிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள் என சூரி ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.

எம்ஜிஆர் சிவாஜி காலம் தொட்டு ரஜினி கமல் அஜித் விஜய் வரை திரைப்படங்கள் வெற்றிப் பெறுவதற்காக கட்அவுட் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, இராட்சத மாலை அணிவிப்பது, மண் சோறு சாப்பிடுவது போன்ற கலாச்சாரங்கள் இரசிகர்களிடையே தொடருவது கண்கூடு.

இந்நிலையில் முதன் முறையாக ஒரு நடிகர் வெளிப்படையாக அதனைக் கண்டித்திருப்பது
சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!