
கோலாலம்பூர், அக்டோபர்-30,
கோலாலம்பூர் சாலைகளில் தங்கியிருக்கும் வீடற்றவர்களில் பலர், கிடைத்ததை சாப்பிடும் காலம் போய், தற்போது உணவுகளைத் தேர்ந்தெடுத்து மட்டுமே சாப்பிடுகிறார்கள்.
தனிநபர்கள், அரசு சார்பற்ற அமைப்பினர் (NGO) என ஏராளமானோர் உணவு தானம் வழங்குவதும் அதற்குக் காரணம் என, கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தாஃபா கூறினார்.
அதுவும், அரசின் அனுமதியின்றியும் தவறான நேரத்திலும் கூட உணவு தானங்கள் வழங்கப்படுகின்றன.
இதனால் பெரும்பாலும் உணவுகள் வீணாகி மாநகரின் சுகாதாரத்தை பாதிக்கின்றன என்றார் அவர்.
இதைச் சமாளிக்க, DBKL சௌ கிட், மேடான் துவாங்கு மற்றும் அஞ்சோங் கெம்பாரா ஆகிய 3 அதிகாரப்பூர்வ மையங்களில் மட்டுமே உணவு தானங்களையும் அத்திவாசியப் பொருட்களையும் வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே, DBKL தற்போது மாநகர அமைப்பை மாற்றி, வீடற்றவர்கள் தெருக்களில் தூங்கும் செயல்பாடுகளை குறைக்கும் திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது.
இதற்காக லண்டன், தோக்யோ, சிங்கப்பூர் போன்ற நகரங்களில் உள்ளது போல், படுத்து உறங்குவதற்கு கடினமான பெஞ்ச் வடிவமைப்பு, அதிக வெளிச்சம் மற்றும் நிலப்பரப்பு அமைப்பை மாற்றி, தெருக்களை பாதுகாப்பானதாக்கியும் நீண்டநாள் தங்குவதைத் தடுக்கவும் ஆராயப்பட்டு வருகிறது.
இத்திட்டம், மாநகரம் என்றுமே மக்கள் தோழமையாக இருப்பதை உறுதிச் செய்யும் அதே வேளை, வீடற்றவர்கள் மாநகரத் வீதிகளில் நிரந்தரமாக தங்குவதைத் தடுக்கும் என சாலிஹா நம்பிக்கைத் தெரிவித்தார்.



