
சுங்கை பட்டாணி, பிப்ரவரி-2 – 107-ஆம் ஆண்டை நிறைவுச் செய்யும் சுங்கை பட்டாணி தைப்பூச திருவிழாவின் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடந்தேறியது.
ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் அதில் பங்கேற்று முருகப் பெருமானின் அருளை வேண்டினர்.
ஒவ்வொரு வருடமும் இங்கு கொண்டாடப்படும் தைப்பூச விழாவில் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது;
இதனால் கொடியேற்றம் மறுநாள் முதல் பால்குடம் ஏந்தி வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை அதிகாலை 4 மணி முதல் காலை மணி 6 வரையிலும் செலுத்தலாம் என தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து அதிகமான பக்தர்கள் தங்கள் காணிக்கையைச் செலுத்தத் தொடங்கியதைக் காண முடிந்தது.
சிலாங்கூர் பத்து மலை, பினாங்கு தண்ணீர் மலை தைப்பூசங்களுக்கு அடுத்து பெரிய விழாவாகக் கொண்டாப்படும் சுங்கைபட்டாணி தைப்பூச விழாவில், ஒவ்வொரு வருடமும் 3 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இந்த சுங்கை பட்டாணி தைப்பூசம், முதல் நாள் மாலை 4 மணி தொடங்கி தைப்பூசம் மறுநாள் வரையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாகும்.