
கோலாலம்பூர், பிப்ரவரி-8 – 13-ஆவது மலேசியத் திட்டத்தின் (RMK-13) கீழ் இந்தியச் சமூகத்திற்கான முன்னெடுப்புகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை முன்னின்று கண்காணிக்க, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா விரும்புகிறது.
அவ்வகையில் அதிகாரப்பூர்வ கண்காணிப்பகமாக பணியாற்றுவதற்கான ஆணையை வழங்குமாறு, பொருளாதார அமைச்சிடம் மித்ரா பரிந்துரைத்துள்ளது.
அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியை நேரில் சந்தித்து பேசவும் நேரம் கேட்டிருப்பதாக, மித்ரா தலைவர் பி.பிரபாகரன் கூறினார்.
பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களில் இந்தியச் சமூகத்தின் பங்கேற்பை MITRA கண்காணிக்க முடியும்; இதன் வழி அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதையும் சேவையளிப்பு ஆக்கப்பூர்வமாக இருப்பதையும் உறுதிச் செய்ய முடியும்.
நிரந்தர கண்காணிப்பகம் ஒன்று இல்லையென்றால், திட்டங்கள் அனைத்தும் வெறும் ஏட்டளவிலான கொள்கைகளாக ஒரு மூலையில் கிடக்குமென, பெர்னாமாவுக்கு வழங்கிய பேட்டியில், பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அவ்வாறு சொன்னார்.
ஜந்தாண்டு கால மலேசியத் திட்டத்தில் இந்தியச் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களை வரையும் முக்கியப் பொறுப்பு, கடந்தாண்டு இறுதியில் முதன் முறையாக மித்ராவுக்கு வழங்கப்பட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.
இந்தியச் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக, மித்ரா ஏற்பாட்டில் நாடளாவிய நிலையில் பல கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன.
அக்கலந்தாய்வுகளில், அரசு சார்பற்ற அமைப்புகள், வர்த்தகச் சங்கங்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
5 அம்சங்களை முன்னிறுத்தி இந்தியர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, பொருளாதார அமைச்சிடம் அறிக்கையாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற ஏழ்மையைத் துடைத் தொழிப்பதில் இந்தியர்களையும் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் இணைத்து, அவர்களும் சொந்த வீடுகளைக் கொண்டிருப்பதை உறுதிச் செய்வது முதன்மைக் குறிக்கோளாகும்.
வருங்காலத் தலைமுறையான இந்திய இளைஞர்களை நிபுணத்துவம் பெற்றவர்களாகவும், திறன் தேர்ச்சி பெற்றவர்களாகவும் உருவாக்குதல், இந்தியத் தொழில்முனைவோரை மேம்படுத்துதல், தமிழ்ப்பள்ளிகளின் வசதிக் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாலர் வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தல், சமூக நிலைத்தன்மையை உருவாக்குதல் ஆகியவை இதர 4 முக்கிய அம்சங்களாகும்.